மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரும் 7ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே லண்டன் சென்றது.
இந்த நிலையில் இந்திய அணியில் ஒரு சில வீரர்கள் மட்டும் தற்போது புறப்பட்டு சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளுக்கு எவ்வளவு பரிசு என்பது குறித்து ஐசிசி தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி 9 அணிகளுக்கும் மொத்தமாக 31 கோடியே 40 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும். இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 13 கோடியே 22 லட்சம் ரூபாய் ரொக்கமும் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 6 கோடியே 61 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும்.
இதே போன்று மூன்றாவது இடம் பிடித்த தென்னாப்பிரிக்காவுக்கு மூன்று கோடியே 72 லட்சம் ரூபாய் ரொக்கமும், நான்காவது இடம் பிடித்த இங்கிலாந்துக்கு 2 கோடியே 90 லட்சம் பரிசும் வழங்கப்பட உள்ளது. இதைப் போன்று ஐந்தாவது இடம் பிடித்த இலங்கைக்கு ஒரு கோடி 65 லட்சமும் ஆறு முதல் ஒன்பதாவது இடம் பிடித்த நியூஸிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ,வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு தலா 82 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
கடந்த முறை போல் இங்கிலாந்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் கூடுதலாக ஒரு நாளை ரிசர்வ் டேவாக ஐசிசி அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கு வழங்கும் பரிசு தொகையை விட மிகவும் குறைவு என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெஸ்ட் போட்டியை ஊக்குவிக்க பரிசு தொகையை பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கால்பந்து போட்டியில் பரிசு தொகை ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிய நிலையில் கிரிக்கெட்டில் அந்த தொகை மிகவும் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.