மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து நடைபெற்ற டிவிஸ்ட் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது.
புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே ஃபைனலுக்கு செல்லும். இம்முறையும் இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற தோல்வி இந்தியாவின் வாய்ப்பை பாதிக்க வைத்திருக்கிறது.

இந்திய அணி இனி பைனலுக்கு சொந்தமாகவே செல்ல வேண்டுமென்றால் ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு டெஸ்டில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்தியா இன்னும் சொந்த மண்ணில் இரண்டு மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இதில் இந்தியா குறைந்த பட்சம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி இரண்டு ,டெஸ்ட் போட்டிகளில் டிராவை சந்திக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்திய அணி அதிகபட்சமாக 67.54 வெற்றி சதவீதத்திற்கு செல்லும். ஒருவேளை இந்தியா எதிர்பார்க்கப்பட்ட வெற்றியைப் பெற முடியாத பட்சத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் வென்றால் அவர்கள் இறுதி சுற்றுக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டியிலும் இலங்கைக்கு எதிராக அந்த நாட்டிற்கு சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலியா ஏழு போட்டிகளுமே வெற்றி பெற்றால், 76.32 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களால் ஐந்து டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்று தென்னாபிரிக்கா அனைத்து போட்டிகளின் வென்றால் தென்னாப்பிரிக்கா பைனலுக்கு சென்று விடும்.
தென்னாப்பிரிக்காவிற்கு தற்போது வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட், இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் என மொத்தம் ஆறு போட்டிகள் இருக்கிறது. இதில் ஆறிலும் தென் ஆப்பிரிக்கா வென்றால் அவர்கள் பைனலுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெற்றிகளை பெற வேண்டும்.
அவ்வாறு வெற்றியைப் பெற்றால் இலங்கையால் 69 புள்ளிகளை பெற்று இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். இந்தியாவுக்கு சாதகமாக முடிவு வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒன்று மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வெல்ல வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணி இன்னும் மூன்று டெஸ்ட்களில் வென்றால் பைனலுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.