லண்டன் : உலக டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் விளையாடி வருகின்றன. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே லண்டனில் கருமேகங்கள் சூழ்ந்தது. இதனால், டாஸ் வென்ற இந்திய அணி யோசிக்காமலேயே பந்துவிச்சை தேர்வு செய்தது.
இந்த நிலையில், லண்டனில், கருமேகங்களும், வெயிலும் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. லண்டனில் தற்போது கோடை காலமாக இருந்தாலும், அங்கு அடிக்கடி மழை பெய்து வரும். இதனால், ஆட்டம் பாதித்து விடக் கூடாது என்பதற்காக 6வது நாள் ரிசர்வ் டேவை ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், லண்டனில் வானிலை நிலவரம் என்ன என்பது குறித்து வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், லண்டனில் தற்போது மழை பெய்ய வாய்ப்பில்லை. உலக டெஸ்ட் பைனலின் முதல் நாள், இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாளில் மழை பெய்ய கொஞ்சம் கூட வாய்ப்பில்லை.
வானம், தெளிவாக தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், 4வது நாளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், ஆட்டம் அன்றைய நாள் தடைப்படலாம் என்றும், ஆட்டத்தின் கடைசி நாள் தொடர்பான வானிலை அறிக்கை இன்னும் வெளிவரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மழை பெய்து, ஓவர்கள் பாதிக்கப்பட்டால், ரிசர்வ் டே பயன்படுத்தப்படும். ஒரு வேளை, ஆட்டம் டிராவானால், இரு அணிக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும்.