லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா 48 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். கேஎஸ் பரத் 5 ரன்களில் வெளியேறினார்.
152 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்து இந்திய அணி தடுமாறிய போது, ரஹானே, ஷர்துல் தாக்கூர் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஷர்துல் தாக்கூர் 51 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ரஹானே 89 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து, இந்திய அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் 173 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 2வது இன்னிங்சில் களமிறங்கியுள்ளது.இந்த கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி இருந்தாலும், இந்திய அணிக்கும் வெற்றி வாய்ப்பு இல்லாமல் இல்லை. ஆனால், அதற்கு இந்திய அணி வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக விளையாட வேண்டும்.
தற்போது ஆஸ்திரேலிய அணியை 2வது இன்னிங்சில் 150 முதல் 200 ரன்களில் சுருட்ட வேண்டும். அப்படி செய்தால், 2வது இன்னிங்சில் இந்திய அணி வெற்றி பெற 320 முதல் 370 ரன்கள் வரை இலக்கு இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறப்பம்சமே, உங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால் கூட, ஆட்டத்தை டிரா செய்யலாம். மேலும், ஒரு முறை பேட்டிங்கில் தவறு செய்தால் கூட, 2வது இன்னிங்சில் அந்த தவறை சரி செய்ய இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனால் தற்போது இந்தப் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.