லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு அமைக்கப்பட்டுள்ள ஆடுகளத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. லண்டன் ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் கொஞ்சம் ஆசிய சூழலை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.
இதனால்தான் கடந்த முறை இந்திய அணி இங்கு விளையாடிய போது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி இந்த மைதானத்தில் தான் நடைபெறுகிறது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் பச்சை பசேல் என இருக்கிறது. இது நிச்சயம் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமாக இருக்கும். எனினும் இது இறுதி பிட்ச் கிடையாது.ஆட்டம் தொடங்கும் முதல் நாள் அல்லது காலையில் கூட வளர்ந்திருக்கும் புல்களை ஆடுகளப் பராமரிப்பாளர்கள் வெட்ட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் மிகவும் அபாயகரமாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறுகையில் பொதுவாக இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்ய நல்ல ஆடுகளத்தை தான் வழங்குவார்கள். ஆனால் இம்முறை எங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி ஆடுகளம் கொஞ்சம் அபாயகரமாக இருக்கிறது. பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி வருகிறது. இதனால் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் கையில் அடிபட்டது என்று கூறினார்.
மேலும் இதே போன்ற ஆடுகளம் தான் போட்டிக்கு பயன்படுத்தப்படும் என்றும் இதனால் சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு இந்த ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத சூழல் இருக்கும் என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கணித்துள்ளார். பயிற்சி செய்வதற்கு வழங்கப்பட்ட ஆடுகளம் அபாயகரமாக இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பிசிசிஐ முறைப்படி புகார் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.