
கடைசி கிரிக்கெட் போட்டி
மார்ச் 13 அன்று தான் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன் பின் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. பெரிய கிரிக்கெட் அமைப்புகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்றுமே இந்த காலகட்டத்தில் கடும் நஷ்டம் அடைந்துள்ளன.

நஷ்டம்
பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த முடியாமல் சுமார் 4,000 கோடி வருவாயை இழக்கும் அபாயத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் நிதி சிக்கலில் மாட்டிக் கொண்டன. இங்கிலாந்து அணி 3800 கோடி அளவுக்கு இழக்கும் அபாயத்தில் உள்ளது.

டெஸ்ட் தொடர்
அதை ஈடு கட்ட இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 8 அன்று துவங்க உள்ளது.

தனிமை
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று அடைந்தனர். அங்கே பயிற்சிக்கு முன் 14 நாட்கள் தனிமையில் மான்செஸ்டர் மைதானத்துக்கு உள்ளேயே இருக்கும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பான சூழல்
இந்தப் போட்டி பாதுகாப்பான சூழலில், வெளி ஆட்கள் யாருக்கும் அனுமதி இல்லாமல், காலி மைதானத்தில் தான் நடக்க உள்ளது. இதன் மூலம், யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தொடரை நடத்த முடியும் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நம்புகிறது.

மீண்டும் கிரிக்கெட் துவங்கும்
கொரோனா வைரஸுக்கு நடுவே நடக்கும் முதல் கிரிக்கெட் தொடர் என்பதால் மற்ற கிரிக்கெட் அணிகளும் இந்த தொடரை உற்று நோக்கி உள்ளன. இந்த தொடர் வெற்றிகரமாக நடந்தால் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்கள் உலகம் முழுதும் நடக்கக் கூடும்.

கொரோனாவை வீழ்த்த வேண்டும்
இந்த நிலையில், இது பற்றி பேசி உள்ளார் முன்னாள் இந்திய வீரர் மதன் லால். அவர் கூறுகையில், "எத்தனை காலம் தான் விளையாட்டை ஒத்தி வைப்பது? கிரிக்கெட், கொரோனாவை வீழ்த்த வேண்டும்." என்று கூறி, இங்கிலாந்து - வெ.இண்டீஸ் தொடர் குறித்த தன் பயத்தையும் பற்றி பேசினார்.

பயம் இதுதான்
"இங்கிலாந்து - வெ.இண்டீஸ் தொடரை பொறுத்த வரை ஒரு விஷயத்தை கண்டு தான் பயப்படுகிறேன். யாராவது ஒரு வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி ஏற்பட்டாலும், கிரிக்கெட் மீண்டும் 2 - 3 மாதங்களுக்கு நிறுத்தப்படும்" என்றார்.

பிரச்சனைகள் அதிகரிக்கும்
மேலும், "அதன் பின் பிரச்சனைகள் தான் அதிகரிக்கும். பிசிசிஐ கூட மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை துவக்குவதை பற்றி சிந்திக்கத் துவங்கும். இந்த தொடரும், இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடரும் சிக்கல் இல்லாமல் நடக்கும் என நான் நம்புகிறேன்." என்று கூறினார் மதன் லால்.


Click it and Unblock the Notifications