மும்பை: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன. ஏதாவது ஒரு காரணத்தில் இந்த ஆட்டம் நடக்காவிட்டால், எந்த அணிக்கு பைனல்ஸ் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பிளே ஆப் சுற்றுகள் நாளை துவங்குகின்றன. வரும் 27ம் தேதி பைனல்ஸ் நடக்க உள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு முதல் ஆளாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முன்னேறியது. அதற்கடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறியது. நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் வென்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தகுதி பெற்றது. நேற்று நடந்த ஆட்டங்களில் மும்பை மற்றும் பஞ்சாப் தோல்வியடைந்ததால், ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆப் முன்னேறியது.
பிளே ஆப் சுற்றில், மும்பையில் நாளை நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.
அதற்கடுத்து 23ம் தேதி நடக்கும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் 3 மற்றும் 4வது இடத்தைப் பிடித்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், நாளை நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டம், மழை அல்லது ஏதாவது காரணங்களால் நடக்காமல் போனால், எந்த அணி நேரடியாக பைனல்ஸ் நுழையும் வாய்ப்பை பெறும்.
மழைக்கான வாய்ப்பு எதும் இல்லை. அதனால் நாளை நிச்சயம் போட்டி நடக்கும். வாதத்துக்காக எடுத்துக் கொண்டால், புள்ளிப் பட்டியலில் அதிக ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளதால் ஹைதராபாத் நேரடியாக பைனல்ஸ் நுழையும்.
எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் நடக்கும் இரண்டாவது தகுதிச் சுற்றில் சிஎஸ்கே விளையாட வேண்டியிருக்கும்.