இந்தியா டி20 உலக கோப்பையில வெற்றி பெறலன்னா கேப்டன் பதவியை ரோகித்துக்கு கொடுக்கலாம்
பெங்களூரு : ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு மற்றும் இந்தியாவில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில் ஆஸ்திரேலிய தொடர் கேள்விக்குறியாகியுள்ளது.
Recommended Video
இந்நிலையில் இந்த இரண்டு தொடர்களில் ஒன்றிலாவது இந்தியா கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றும் அவ்வாறு இல்லையென்றால் கேப்டன்ஷிப்பில் மாற்றம் செய்யப்படுவது குறித்து கிரிக்கெட் நிர்வாகம் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்றும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா கடந்த 2013லிருந்து எந்த கோப்பையையும் கைப்பற்றாத நிலையில், இன்னும் சில மாதங்கள் கேப்டன் விராட் கோலிக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட்டில் சிறப்பு
கடந்த 2014ல் டெஸ்ட் கேப்டன் பதவி முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியிடம் இருந்து கோலிக்கு வழங்கப்பட்டது. அதில் அவர் சிறப்பாக செயல்பட்டு, சர்வதேச அளவில் இந்திய டெஸ்ட் அணியை முதலிடத்திற்கு கொண்டு வந்தார். இதனிடையே, கடந்த 2017ல் அனைத்து வடிவங்களுக்கான கேப்டன் பதவியும் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

கோலியின் கேப்டன் திறன்
கடந்த 2013ல் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதோடு, எந்த பெரிய தொடரையும் இந்தியா இதுவரை வெல்லவில்லை. இதையடுத்து கோலியின் கேப்டன்ஷிப் தொடர்ந்து கேள்விக்குறியாகியுள்ளது. அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பைகளை கைப்பற்றும் திறன் அவரிடம் இருக்கிறதா என்பது குறித்து தொடர்ந்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆகாஷ் சோப்ரா கருத்து
இதனிடையே, முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். யூடியூபில் சவேரா பாஷாவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில், அடுத்து வரவுள்ள இரண்டு டி20 உலக கோப்பை தொடர்களில் இந்தியா கோப்பையை கைப்பற்றவில்லை என்றால், கேப்டன் பதவியை அடுத்தவருக்கு மாற்றிக் கொடுப்பது குறித்து கிரிக்கெட் நிர்வாகம் ஆலோசனை மேற்கெள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

கோப்பை வெல்ல வாய்ப்பு
அவ்வாறு கேப்டன் பதவியை மாற்றிக் கொடுக்க ஆலோசனை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அந்த பதவி துணை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொடுக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். கேப்டன் பதவியில் தன்னுடைய திறமையை அவர் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்தியா மற்றொரு தலைமையின் கீழ் செயல்படுவதற்கும், அதன்மூலம் கோப்பைகளை கைப்பற்றுவதற்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

திறமை குறையாது
கேப்டன் பதவியை விராட் கோலியிடம் இருந்து ரோகித்திற்கு அளிப்பதால், விராட்டின் ஆடும் திறமை சிறிதும் குறையாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏனெனில், விராட் கோலி, அந்த அளவிற்கு உயரத்திற்கு சென்றுவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார். கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications