லண்டன்: வெளிநாட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருப்பது சிறப்பான ஒன்று என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
18 மாதங்களுக்கு பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்கியா ரஹானே மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக ஆடிய ரஹானே, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக வெளுத்து வாங்கினார். இவரின் அதிரடியால் சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வென்றது. அதுமட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடப்பதால், வெளிநாடுகளில் சிறப்பாக ஆடும் ரஹானே மீது ரசிகர்களிடையே அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் ரஹானே பூர்த்தி செய்வாரா என்பது ஒரு பக்கம் இருக்க, இந்திய அணி முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்திய அணிக்குள் ஏராளமான அனுபவங்களை ரஹானே கொண்டு வந்துள்ளார். அதேபோல் வெளிநாடுகளில் ரஹானேவின் ஆட்டம் அனைவருக்கும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மண்ணில் கூட சதம் விளாசி அசத்தியுள்ளார். அதேபோல் போற்றத்தக்க ஆட்டங்களை இதே மண்ணில் ரஹானே ஆடி இருக்கிறார்.
அதனால் ரஹானே அணியில் இருப்பது நல்ல உணர்வை கொடுக்கிறது. ஸ்லிப் ஃபீல்டிங்கில் சிறந்த கேட்ச்களை எடுக்கும் திறன் கொண்டவர் ரஹானே. அதேபோல் மாபெரும் வெற்றியை இந்திய அணியின் கேப்டனாக பெற்றவர். அதேபோல் இந்த வாய்ப்பு மட்டும் தான் ரஹானேவுக்கு கிடைக்கும் என்பதல்ல. சில நேரங்களில் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின், கம்பேக் கொடுக்கும் வீரர்கள் பலரும் நீண்ட ஆண்டுகள் சிறப்பாக விளையாடுவார்கள்.
ரஹானேவுக்கு இந்த ஒரேயொரு ஆட்டம் மட்டும் தான் வாய்ப்பு என்று யாரும் எழுதி வைக்கவில்லை. ரஹானே சிறப்பாக விளையாடினால் நிச்சயம் அணியில் நீடிக்க போகிறார். சில நேரங்களில் காயத்தில் இருந்து வரும் வீரர்கள் என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் ரஹானேவின் ஆட்டம் நிச்சயம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.