மும்பை: மும்பையில் சியாட் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய வீரர்களான முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இரண்டிலும் எந்த மாற்றங்களும் செய்யவில்லை. ஏனென்றால் உலகக்கோப்பை தொடர் எங்களுக்கு சிறந்த பயணமாக அமைந்தது. பயிற்சி, திட்டம் உள்ளிட்டவற்றில் எங்களின் உச்சக்கட்ட திறமையையும் செயல்படுத்தினோம்.

தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று அசத்தினோம். அதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை. இந்திய அணி, பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். உலகக்கோப்பையில் என்ன செய்தோமோ, அதனை மீண்டும் செய்ய வேண்டும் என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தோம்.
அதே எனர்ஜி, அதே வைப், அதே சூழலை உருவாக்க முயற்சித்தோம். இம்முறை கூடுதலாக அதிர்ஷ்டம் எங்களுக்கு தேவைப்பட்டது. 2011ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்ற போது அந்த அணியில் நான் இல்லை. ஆனால் இப்போது பயிற்சியாளராக ஒவ்வொரு நகருக்கும் பயணித்த போது, இந்த வெற்றி மக்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்பதை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக உள்ளது.
சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பை தோல்வி நிச்சயம் சோகமானது தான். அன்றைய நாளில் ஆஸ்திரேலியா அணி நம்மைவிட சிறந்த கிரிக்கெட்டை விளையாடியது. வெற்றி, தோல்வி என்பது கிரிக்கெட்டில் சகஜம் தான் என்று தெரிவித்தார். தொடர்ந்து, உங்களின் வாழ்க்கையை படமாக எடுத்தால் யார் நடிகக் வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ராகுல் டிராவிட், நல்ல சம்பளம் கொடுத்தார்கள் என்றால்.. நானே நடிக்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார். இதனால் அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. சில நாட்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் வாழ்க்கைப் படம் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.