டாக்கா: வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அகமது, இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் தலையை வெட்டி கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம், அந்த நாட்டில் வைரலாக பரவிவருகிறது. ஜென்டில்மேன் கேம் எனப்படும் கிரிக்கெட்டின் தரத்தை வங்கதேச ரசிகர்கள் தொடர்ந்து கெடுத்து வருவது கிரிக்கெட் ரசிகர்களை ஆத்திரப்பட வைத்துள்ளது.
இந்திய அணி வீரர்களின் தலையை பாதி மொட்டையடித்தது போன்ற புகைப்படத்தை கடந்த ஆண்டு வங்கதேச பத்திரிகையொன்று வெளியிட்டு கண்டனங்களை சம்பாதித்தது.

இந்நிலையில், நாளை ஆசிய கோப்பை இறுதி போட்டியில், இந்தியா-வங்கதேசம் மோத உள்ள நிலையில், டோணி தலையை டஸ்கின் அகமது கையில் வைத்திருப்பது போன்ற படங்கள் வங்கதேச சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி, அது இந்திய சோஷியல் மீடியாக்களுக்கும் வந்துவிட்டது.
வங்கதேச ரசிகர்கள், மீடியாக்கள் தொடர்ந்து இதுபோல அநாகரீக போஸ்டர்கள் தயாரித்து வருவது, ஜென்டில்மேன் ஆட்டமான கிரிக்கெட் மீதான மரியாதையை குலைப்பதோடு, இரு நாட்டு ரசிகர்கள் நடுவே பதற்றத்தை உருவாக்குவதாக அமைந்துவிடுவதாக சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.. என்ற பழமொழிக்கு ஏற்ப, ஏதோ இரு போட்டிகளில் ஜெயித்துவிட்டால் போதும், அடிமட்ட அணியான வங்கதேசத்துக்கும், அதன் ரசிகர்களுக்கும், உன்மத்தம் தலைக்கு ஏறிவிடுகிறது. ஐசிசி உரிய நடவடிக்கை எடுக்குமா?