நலி மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் சர்வதேச மாஸ்டர்ஸ் டி20 தொடர் நவி மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய ஆறு அணிகள் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சச்சின் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணியும், மார்கன் தலைமையிலான இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற சச்சின் டெண்டுல்கர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியில் மார்கன் 14 ரன்களிலும், ஆம்ப்ரோஸ் 23 ரன்களிலும் மேடி 25 ரன்களிலும் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய மாஸ்டர்ஸ் அணியில் தவுல் குல்கர்னி மூன்று விக்கெட்டுகளையும், மிதுன் மன்ஹாஸ், பவன் நேகி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
இதனை அடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மாஸ்டர்ஸ் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரராக சச்சின் உடன் குர்கிரித் சிங் மான் விளையாடினார். 52 வயதான சச்சின் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷி ஆக்கினார். குறிப்பாக சச்சின் தன்னுடைய சிக்னேச்சர் ஷாட்களை ஆடி சிக்ஸர் அடித்தார்.
சச்சின் டெண்டுல்கர் கடைசியாக சர்வதேச கிரிக்கெட் ஆடி 12 ஆண்டுகள் ஆகினாலும், கொஞ்சம் கூட தன்னுடைய ஆட்டத்தில் தோய்வே இல்லாமல் அதிரடி காட்டினார். 21 பந்துகளை எதிர்கொண்ட சச்சின் 34 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரி,ஒரு சிக்சர் அடங்கும். 52 வயதில் விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் ஸ்டிரைக் ரேட் 161 என்ற அளவில் இருந்தது.
குர்கிரீத் சிங் மான் 35 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார் இதில் 10 பவுண்டர்களும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதேபோன்று மூன்றாவது வீரராக விளையாடிய யுவராஜ் சிங், 14 பந்துகளில் 27 ரன்கள் சேர்க்க இந்திய மாஸ்டர்ஸ் அணி 11.4 ஓவரில் எல்லாம் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 133 ரன்கள் மட்டுமே எட்டியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய மாஸ்டர் அணி நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.