சென்னை: சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வரும் எனக்கு இந்த ஆடுகளத்தை பார்த்த போது 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்று நம்பிக்கை வந்ததாக நட்சத்திர வீரர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் முதல் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால், இந்த முடிவை ஆஸ்திரேலிய அணி எடுத்தது. ஆனால் இந்திய அணி Black Soil பிட்ச் என்பதை அறிந்து 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது.

இதில் இந்திய அணி ஸ்பின்னர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் மூவரும் இணைந்து 30 ஓவர்கள் வீசி 104 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். அதிலும் நட்சத்திர வீரர் ஜடேஜா ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகிய மூவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். அவர் 10 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 மெய்டன் ஓவர்கள் உட்பட 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதுகுறித்து நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா பேசுகையில், நான் சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறேன். இந்த ஆடுகளத்தின் சூழல் பற்றி அனைத்தையும் அறிவேன். இன்றைய ஆட்டத்தில் பிட்சை பார்த்த போதே, நிச்சயம் 2 முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று நினைத்தேன். அதேபோல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்டம்ப் லைன் வீசுவது தான் எனது திட்டமாக இருந்தது. ஆனால் எந்த பந்து டர்ன் ஆகும், எந்த பந்து நேராக செல்லும் என்பது பேட்ஸ்மேன்களுக்கு தெரியாது.
நான் டர்னாகும் பந்துகளை வீசிய போது கொஞ்சம் வேகத்தையும் இணைந்து கொண்டேன். சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால், எப்போது ரசிகர்கள் முழுமையாக குவிந்து விடுவார்கள். சேப்பாக்கம் மைதானத்தில் எந்தவித வித்தியாசமான ஷாட்களையும் விளையாட தேவையில்லை. அதனால் அடிப்படை கிரிக்கெட்டை விளையாடினாலே வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.