சென்னை: புனே அல்லது ராஜ்கோட் ஐபிஎல் அணிகளில் சேர்க்காவிட்டால், ஏலம் மூலம் அணியில் சேர வேண்டியிருக்கும் என்று சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நிர்வாகிகள் மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டால், சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் 2 வருட சஸ்பெண்ட் தண்டனைக்கு உள்ளாகியுள்ள நிலையில், ராஜ்கோட் மற்றும் புனே ஆகிய இரு அணிகள் வரும் 2 ஆண்டுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் எந்த அணிக்கு செல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது. இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் டிவிட்டரில் கூறுகையில், நான் ராஜ்கோட் அல்லது புனே அணிக்கு செல்ல வேண்டியது குறித்து இன்னும் 3 நாட்களில் தெரிந்துவிடும். புதிய தொடக்கம், புதிய சவாலுக்காக காத்திருக்கிறேன்.
இவ்விரு அணிகளில் ஒன்றில் நேரடியாக சேர முடியாத வாய்ப்பு உருவானால், ஏலம் மூலம் ஏதாவது ஒரு அணியில் சேர வேண்டிவரும். எதுவாக இருந்தாலும், நான் சேலஞ்சை விரும்புகிறேன். தேங்கிகிடக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.