மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பிரதான ஸ்பின்னராக குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரை விடவும் ரவி பிஷ்னாய் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஸ்பின்னர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற விவாதம் எழுந்துள்ளது.

ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் இதுவாகும். இதன்பின் ஐபிஎல் தொடரை வைத்தே, டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தேர்வு செய்யப்படவுள்ளது. ஏற்கனவே 14 மாதங்களுக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 அணிக்கு திரும்பியுள்ளதால், யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.
இதனிடையே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் ரவி பிஷ்னாய் சிறப்பாக பந்துவீசி தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். வேகப்பந்துவீச்சாளர்களால் பவர் பிளேவில் விக்கெட் வீழ்த்த முடியாத போது, பவர் பிளேவிலேயே தைரியமாக கூக்ளி பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை அசால்ட்டாக வீழ்த்தி காட்டினார்.
இருப்பினும் இவருக்கு தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. குல்தீப் யாதவ் வருகையால், பிளேயிங் லெவனில் ரவி பிஷ்னாய் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசுகையில், நான் ரவி பிஷ்னாயை தான் முதன்மை ஸ்பின்னராக டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்வேன்.
ஏனென்றால் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரை காட்டிலும் நல்ல பேட்ஸ்மேன் மற்றும் மிகச்சிறந்த ஃபீல்டர் ரவி பிஷ்னாய் தான். கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை வீழ்த்த லக்னோ அணிக்கு முக்கிய வீரராக பிஷ்னாய் தான் இருந்தார் என்று தெரிவித்துள்ளார். 23 வயதாகும் ரவி பிஷ்னாய், இதுவரை 21 டி20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.