மொஹாலி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸின் போது, இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாத வீரர்களின் பெயர்களை ரோகித் சர்மா மறந்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். மொஹாலி மைதானம் வழக்கமாக சேஸிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், ரோகித் சர்மா இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்த போட்டிக்கு முன்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா கூட்டணி களமிறங்கும் என்று கூறியிருந்தார். இருவருமே அதிரடி ஆட்டத்திற்கு பெயர் எடுத்தவர்கள் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சதம் விளாசிய சஞ்சு சாம்சன், அனுபவ வீரர் குல்தீப் யாதவ் மற்றும் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோர் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே டாஸின் போது ரோகித் சர்மாவிடம் பிளேயிங் லெவனில் யார் தேர்வு செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ரோகித் சர்மா தரப்பில், சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான் என்று இரு பெயர்களை மட்டும் கூறிவிட்டு, மற்ற இருவரின் பெயர்களை மறந்தார். அப்போது எதிரில் நின்ற முரளி கார்த்திக் குல்தீப் யாதவ் என்று எடுத்து கொடுக்க, ஆம்.. குல்தீப் யாதவ் விளையாடவில்லை. அதேபோல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடவில்லை என்று தெரிவித்தார்.
வழக்கமாக ஐபிஎல் தொடரின் போது இம்பேக்ட் பிளேயர் விதியால் வீரர்களின் பெயர்களை கேப்டன்கள் மறப்பது வழக்கமான ஒன்று. ஆனால் டி20 கிரிக்கெட் பக்கம் 14 மாதங்களுக்கு பின் திரும்பிய போது, பெஞ்ச் செய்யப்பட்ட வீரர்களை நினைவில் வைக்கவில்லை. அவர் சிந்தித்த போது மொஹாலி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்ப, இது ரோகித் சர்மாவின் சேட்டைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.