மொஹாலி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது நபி 27 பந்துகளில் 42 ரன்களும், அஸ்மத்துல்லா 29 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 159 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டத்தின் 2வது பந்திலேயே ரோகித் சர்மா டக் அவுட்டாகி விரக்தியுடன் வெளியேறினார். இதன்பின் சுப்மன் கில் - திலக் வர்மா கூட்டணி இணைந்து நிதானமாக ரன்கள் சேர்த்தது. பவர் பிளே ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீச, இருவரும் ரன்காள் சேர்க்க திணறினர்.
ஸ்பின்னரான முஜீப் உர் ரஹ்மானை அட்டாக் செய்ய நினைத்து சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து சிவம் துபே - திலக் வர்மா இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 36 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் சிவம் துபே அதிரடிக்கு திரும்பினார். நபி வீசிய 7வது ஓவரில் மட்டும் இருவரும் இணைந்து 16 ரன்களை விளாசினர்.
தொடர்ந்து ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரும், பவுண்டரியுமாய் பறக்க, திடீரென சிறப்பாக ஆடிய திலக் வர்மா 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் சிவம் துபே - ஜித்தேஷ் சர்மா இருவரும் அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினர். குறிப்பாக ஜித்தேஷ் சர்மா தொடக்கம் முதலே பேட்டை வீசி கொண்டே இருந்தார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் 83 ரன்களை குவித்தது.
ஒருகட்டத்தில் ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் சர்மா 31 ரன்களில் வெளியேற, மறுமுனையில் சிறப்பாக ஆல்ரவுண்டர் சிவம் துபே 38 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இந்திய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸ் மற்றும் பவுண்டரி விளாசி சிவம் துபே வெற்றிபெற வைத்தார்.
சிறப்பாக ஆடிய சிவம் துபே 40 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 60 ரன்களும், ரிங்கு சிங் 9 பந்துகளில் 16 ரன்களும் விளாசினர். இதன் மூலமாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.