மொஹாலி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் தொடங்கியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் இதுவாகும். இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.இதனிடையே 14 மாதங்களுக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதன்பின் ரோகித் சர்மா பேசுகையில், சேஸிங்கை தேர்வு செய்ததற்கு எந்த காரணமும் இல்லை. இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அதேபோல் பெரிய மாற்றம் இருக்காது. இந்த 3 போட்டிகளில் இருந்து ஏராளமானவற்றை எதிர்காலத்தில் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு அதிகளவிலான டி20 போட்டிகள் இல்லை.
ஐபிஎல் தொடர் மட்டுமே உள்ளது. இந்த தொடருக்கு முன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் இந்திய அணியின் காம்பினேஷன் பற்றி ஆலோசித்தேன். வெற்றியே பிரதான விஷயம் என்றாலும், ஒரு அணியாக விளையாட வேண்டும். இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். நேற்று ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா தொடக்கம் கொடுப்பார்கள் என்று கூறிவிட்டு, தற்போது இந்திய அணி ட்விஸ்ட் வைத்துள்ளது. இதனால் சொந்த ஊரில் சுப்மன் கில் களமிறங்கவுள்ளார்.
தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஜத்ரான் பேசுகையில், நாங்களும் முதலில் பந்துவீசவே விரும்பினோம். அதனால் பெரிய ஏமாற்றம் இல்லை. எங்களின் திட்டங்களை செயல்பட விரும்புகிறோம். டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியுடன் விளையாடுவது எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக நினைக்கிறோம். நூர் அஹ்மத், ஷராஃபுதீன், சலீம் சைஃபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் விளையாடவில்லை என்று தெரிவித்தார்.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சிவம் துபே, ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.