மொஹாலி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் வெளியேறி இருக்கிறார்.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக முகமது நபி 27 பந்துகளில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 42 ரன்களை சேர்த்தார். கடைசி நேரத்தில் வந்த நஜிபுல்லா 11 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் அக்சர் படேல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி அடைந்த தோல்விக்கு பின் ரோகித் சர்மா முதல்முறையாக இந்திய அணிக்காக டி20 போட்டியில் களமிறங்கினார்.
14 மாத இடைவெளிக்கு பின் களமிறங்கியதால், அவர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாகவே ரோகித் சர்மா நடந்து வந்த போது ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் தரப்பில் வேகப்பந்துவீச்சாளரான ஃபசல் ஃபரூக்கி முதல் ஓவரை வீசினார். வழக்கம் போல் ஸ்ட்ரைக்கை ரோகித் சர்மா எடுத்தார்.
முதல் பந்தில் ரன் எடுக்காமல் நிதானம் காத்த ரோகித் சர்மா, 2வது பந்தில் ஸ்டம் டவுன் வந்து மிட் ஆஃப் திசையில் அடித்தார். உடனடியாக ரோகித் சர்மா ரன் எடுக்க ஓட்டம் பிடிக்க, மறுமுனையில் சுப்மன் கில் ஃபீல்டாக பந்தை தடுத்த ஜத்ரானை வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தார். அவர் பந்தை எடுப்பதற்குள் மறுமுனைக்கு ரோகித் சர்மா வந்த போது, சுப்மன் கில் திரும்பி ரோகித் சர்மாவை பார்த்தார்.
உடனடியாக பந்தை கைகளில் எடுத்து விக்கெட் கீப்பர் பக்கம் பந்தை த்ரோ செய்தார் ஜத்ரான். இதையடுத்து ரோகித் சர்மா ரன் அவுட் செய்யப்பட்ட நிலையில், கம்பேக் போட்டியில் அவர் டக் அவுட்டாகி வெளியேறினார். அப்போது ரன் அவுட்டானதால் கோபமடைந்த ரோகித் சர்மா, களத்திலேயே சுப்மன் கில்லை சில வார்த்தைகளால் பொளந்து கட்டினார். விரக்தியில் ஏதோதோ பேசிக் கொண்டு ரோகித் சர்மா நடந்து வந்தது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.