மும்பை: 14 மாதங்களுக்கு பின் மீண்டும் இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா திரும்பியதால், ஹர்திக் பாண்டியா டி20 கேப்டன் பதவியை இழந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 14 மாதங்களுக்கு பின் மீண்டும் இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளனர். அதிலும் ரோகித் சர்மா கேப்டனாகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் மும்பை அணியின் கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். அப்போது ஹர்திக் பாண்டியாவுக்கு ரோகித் சர்மா தரப்பிலோ அவரது மனைவி தரப்பிலோ ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கப்படவில்லை. இதனால் இருவருக்கும் இடையில் நல்ல உறவு இல்லை என்று பார்க்கப்பட்டது.
இதனிடையே 2022 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே டி20 அணி பக்கம் வரவேயில்லை. இதனால் 14 மாதங்களாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி உருவாக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே டி20 உலகக்கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளனர்.
அதுமட்டுமெல்லாமல் டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்காவில் நடக்கவுள்ளதால், நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ விரும்பவில்லை. இதனால் ஹர்திக் பாண்டியாவை புறந்தள்ளிவிட்டு, மீண்டும் ரோகித் சர்மாவையே பிசிசிஐ கேப்டனாக நியமனம் செய்துள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியாவின் நிலை பரிதாபமாக இருப்பதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.