மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அண்மை காலமாக ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் குறித்த பேச்சுகள் அதிகமாகியுள்ளது. உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின் அந்த தொடரில் இருந்து விலகினார். அதன்பின் இந்திய அணி ஆடிய ஆஸ்திரேலியா டி20 தொடர், தென்னாப்பிரிக்கா டி20 தொடர், தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கவில்லை.

இதனிடையே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தரப்பில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா களமிறங்குவார் என்று கூறியிருந்தார். இதனிடையே ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். அதன்பின் ஹர்திக் பாண்டியா ஆஃப்கானிஸ்தான் டி20 மற்றும் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியதாக தகவல் வெளியாகியது.
குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு கொண்டு வந்த அணி நிர்வாகம், அவருக்கு கேப்டன் பொறுப்பையும் வழங்கியது. இதனால் ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் பற்றி முழு விவரங்களையும் அறியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டன்சி மாற்றம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்காது என்று பார்க்கப்பட்டது.
இதன்பின் ஹர்திக் பாண்டியாவின் நெருங்கிய நட்பு வட்டாரம் தரப்பில், ஹர்திக் பாண்டியா விரைவில் ஃபிட்னஸை எட்டுவார் என்றும், அவர் பற்றி வரும் செய்திகள் வதந்தியே என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா களமிறங்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் விலகிய நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியாவும் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.