மும்பை: அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடருக்காக விராட் கோலிக்கு போஸ்டர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரையே தேர்வு செய்யாமல் பிசிசிஐ தவிர்க்க வாய்ப்பில்லை என்று ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. ஆனாலும் இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் ஓராண்டுக்கும் மேலாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதை தவிர்த்து வந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும், டி20 உலகக்கோப்பை நெருங்குவதால் மீண்டும் கவனத்தை டி20 கிரிக்கெட் பக்கம் திருப்பவுள்ளனர். ஏற்கனவே இருவரும் தங்களது நிலைப்பாடு குறித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரிடம் தெளிவாக கூறிவிட்டதாக தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் திரும்பியுள்ளதால், எந்த வீரரை வெளியேற்றுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் நேற்று இரவு அறிவிக்கப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடருக்கான போஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் நடக்கும் போட்டிக்கான போஸ்டரில் விராட் கோலி புகைப்படம் தான் அமைந்தது.
அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான போஸ்டர் பாயாக விராட் கோலி தான் இருக்கிறார். டி20 உலகக்கோப்பையை அமெரிக்காவில் நடத்துவதன் மூலமாக புதிய கதவுகளை ஐசிசி திறக்க முயற்சித்து வருகிறது. அதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் நிச்சயம் விளையாட வேண்டிய நிலையும் உள்ளது.
இதனால் போஸ்டர் பாயாக உருவாகியுள்ள விராட் கோலியை தேர்வு செய்யாமல் தவிர்ப்பது ஐசிசி மற்றும் பிசிசிஐ-க்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தேர்வு செய்யப்படவே வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.