நியூசிலாந்து போட்டி
இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தன் இன்னிங்க்ஸ்-ஐ ஆடி முடித்த அடுத்த சில நிமிடங்களில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் போட்டி துவங்கியது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
டக் அவுட்
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் மார்டின் குப்டில், கோலின் மன்றோ இருவரும் தாங்கள் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆனார்கள். அதிலும் குப்டில் கொஞ்சம் ஸ்பெஷல் டக் அவுட். போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். மன்றோ முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் டக் அவுட் ஆனார்.
இந்தியாவுக்கு சவால்
ரோஹித் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெறும் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில், பலரும் அவரை கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில், நியூசிலாந்து வீரர்கள் இருவரும் அவருக்கு போட்டியாக களத்தில் குதித்து டக் அவுட் ஆனார்கள்.
சுவாரசியம் என்ன?
இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், கடந்த 2015உலகக்கோப்பை தொடரில் குப்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் பந்தில் டக் அவுட் ஆகி இருக்கிறார்.
ரோஹித் - குப்டில் சாதனை
இன்னும் ஒரு சுவாரசியம், ரோஹித் சர்மா - குப்டில் இருவருமே இரட்டை சதம் அடித்த துவக்க வீரர்கள். ரோஹித் சர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார். அவர் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடிப்பார் என பயங்கர பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால், 1 ரன்னில் ரோஹித் ஆட்டமிழந்தார்,
குப்டில் ஏமாற்றம்
அதே போல, குப்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த உலகக்கோப்பை போல இரட்டை சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.
நியூசிலாந்து சமாளித்தது
துவக்க வீரர்களை டக் அவுட்டில் இழந்தாலும், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ராஸ் டெய்லர் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் இணைந்து கூட்டணியாக 160 ரன்கள் குவித்தனர். டெய்லர் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.