“ரோஹித் சர்மா கொடுத்த டிப்ஸை இந்திய அணிக்கு எதிராகவே பயன்படுத்துவேன்” - ஆப்கன் ஸ்பின்னர் கசான்பர்
தர்மசாலா: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 13ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் இருதரப்பு ஒருநாள் தொடர் இதுவாகும். இத்தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனக்கு வழங்கிய ஆலோசனைகளை, இந்திய அணிக்கு எதிராகவே பயன்படுத்தி சாதிக்கப் போவதாக ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசான்பர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஐபிஎல் தொடரில் மும்பை அணியக்காக 20 வயதான அல்லா கசான்பர் விளையாடினார். கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடாத இவரை, மெகா ஏலத்தில் 4.8 கோடி ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது. இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடிய இவர் 10.01 எகானமி ரேட்டில் பந்துவீசி 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை அணியில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடிய அனுபவம் குறித்து கசான்பர் மனம் திறந்துள்ளார்.

இது குறித்து கசான்பர் கூறுகையில், ரோஹித் சர்மா ஒரு தலைசிறந்த வீரர் மற்றும் ஜாம்பவான். அவர் தொடக்க வீரராக களமிறங்குவார், நாங்கள் புதிய பந்தில் பந்துவீசுவோம். ஐபிஎல் தொடரின் போது அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஒருமுறை நான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவர் எனக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கொடுத்த அந்த ஆலோசனைகளை அவருக்கு எதிராகவே இந்த தொடரில் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போம் என்றார்.
மேலும் ஐபிஎல் அனுபவம் குறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த முன்னணி வீரர்கள் மற்றும் அற்புதமான பயிற்சியாளர்கள் உள்ளனர். அவர்களுடன் இணைந்து விளையாடியதும், ஒரே அறையை பகிர்ந்து கொண்டதும் எனக்கு பல புதிய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. கிரிக்கெட் என்பது தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விளையாட்டு. நான் எதிர்காலத்திலும் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
இந்தியாவில் தற்போது கடுமையான வெயில் நிலவுகிறது. ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடியதால் இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு நாங்கள் ஏற்கனவே நன்கு பழகிவிட்டோம். இந்தியா வருவதற்கு முன்பு காபூலில் ஒரு மாதம் பயிற்சி முகாமில் ஈடுபட்டோம். எனவே ஆடுகளம் மற்றும் வானிலைக்கு ஏற்ப எங்களை நாங்களே தயார்படுத்திக் கொண்டுள்ளோம். அனைத்து வீரர்களும் முழு உற்சாகத்துடன் உள்ளனர்.
தற்போது ஆப்கானிஸ்தான் அணியில் அதிக திறமையான இளம் வீரர்கள் உருவாகி வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் இருந்து நேரடியாக சர்வதேச போட்டிகளுக்கும், சர்வதேச லீக் தொடர்களுக்கும் முன்னேறுவது சவாலானது. ஆனால் கடின உழைப்பு, முழு நம்பிக்கை மற்றும் நமது திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொண்டால் எதையும் எளிதாக சாதிக்கலாம் என அல்லா கசான்பர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
