ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிப்பு.. பும்ரா, சாம்சனுக்கு அணியில் இடம்
மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த சூர்யான்ஷ் ஷெட்ஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ரா, நிதிஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பும்ரா, சுந்தர் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் பங்கேற்பு உடற்தகுதி சான்றிதழைப் பொறுத்தே இறுதி செய்யப்படும்.

ஆல்-ரவுண்டர் நிதிஷ் ரெட்டி முழு உடற்தகுதியுடன் தேர்வுக்கு தயாராக உள்ளார். அதே நேரத்தில், ஜஸ்பிரித் பும்ரா இன்னும் முழுமையான உடற்தகுதியை எட்டவில்லை. அவரது பணிச்சுமையைக் கருத்தில் கொண்டும், காயத்தில் இருந்து முழுமையாக மீள்வதற்கும் அவருக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படலாம் என்பதால், அவர் இந்தத் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் (உடற்தகுதிக்கு உட்பட்டது), வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா (உடற்தகுதிக்கு உட்பட்டது), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா (உடற்தகுதிக்கு உட்பட்டது).
கடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சூர்யவன்ஷிக்கு இடம் அளிக்கப்பட்டது. தற்போது சாம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இந்தப் போட்டிகள் அனைத்தும் டெல்லியில் நடைபெறுகிறது. செப்டம்பர் 13 , 15 மற்றும் 17ஆம் தேதி முறையே 3 டி20 போட்டிகளும் நடக்க உள்ளது.


Click it and Unblock the Notifications
