IND vs AFG: கோலி, ரோஹித்தை கழட்டி விடப் பார்த்த அகர்கர்.. ஆப்கானிஸ்தான் தொடரில் கடைசி நேர 'பல்டி'
மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ தேர்வுக் குழு முதலில் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், கடைசி நேரத்தில் அவர்களுக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணி மாற்றத்தை மனதில் வைத்து, இளைஞர்களுடன் இந்த அனுபவ வீரர்கள் இணைந்து விளையாடுவது அவசியம் என்பதே இந்த திடீர் மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஜூன் 14-ம் தேதி தொடங்கும் இந்த 3 போட்டிகள் கொண்ட ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய அஜித் அகர்கர் தலைமையிலான குழு ஆலோசனையில் ஈடுபட்டது. 2026 ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு தொடங்கும் இந்தத் தொடரில், பணிச்சுமை காரணமாக கோலி மற்றும் ரோஹித்திற்கு ஓய்வு வழங்கத் தேர்வுக் குழு முதலில் விரும்பியது. ஆனால், இவர்கள் இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே சர்வதேச அளவில் கவனம் செலுத்தி வருவதால், அவர்களுக்குத் தொடர்ச்சியான போட்டிகள் தேவை என்ற முடிவுக்குத் தேர்வுக் குழு வந்துள்ளது.

இளம் வீரர்களுக்கு வழிகாட்டுதல்
இந்திய அணி தற்போது ஒரு மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இளம் வீரர்கள் ஜாம்பவான்களான கோலி மற்றும் ரோஹித் ஆகியோருடன் இணைந்து விளையாடும்போது, அணியின் கட்டமைப்பு மற்றும் ஒற்றுமை மேம்படும் எனத் தேர்வுக் குழு நம்புகிறது. அவர்களின் அனுபவம் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதால், இந்தத் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. மேலும், 2027 உலகக் கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், சீனியர் வீரர்களின் உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறனைத் தொடர்ந்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோலியின் உருக்கமான பதில்
இதற்கிடையே தனது எதிர்காலம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விராட் கோலி, "நான் அணியில் இருக்கும்போது எனது பங்களிப்பு மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனது மதிப்பையும் திறமையையும் ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இல்லை. கிரிக்கெட்டிற்காக நான் உண்மையாக உழைக்கிறேன். என்னால் அணிக்கு பலன் கிடைக்கும் வரை நான் விளையாடுவேன். எனது உழைப்பில் நான் நேர்மையாக இருக்கிறேன்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
