மும்பை: சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் மோசமாக செயல்படுவதால், அவரை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் விமர்சித்துள்ளார்.
கடந்த டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். ஆஃப் ஸ்பின்னர் என்ற வகையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமைகள் இந்திய அணிக்கு மிகப்பெரிய பயனை கொடுத்தது. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் மோசமாக செயல்பட்டு வந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

அதேபோல் அஸ்வினுக்கு 37 வயதாகிவிட்ட நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர வீரராக விளையாடி வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 490 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசுகையில், ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச்சிறந்த பவுலர். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் விளையாட தகுதியில்லை. அவர் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் என்ன செய்கிறார் என்று அனைவருக்கும் தெரியும்.
நிச்சயம் டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வேண்டும். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து அஸ்வினை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்கு 14 மாதங்களுக்கு பின் திரும்பியுள்ளனர்.
அவர்கள் கம்பேக் கொடுத்ததற்கு யுவராஜ் சிங் ஆதரவளித்துள்ள நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவதற்கு மட்டும் யுவராஜ் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்கின் கருத்தால் கிரிக்கெட் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் விவாதம் ஏற்பட்டுள்ளது.