மொஹாலி: இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரின் கேப்டன்சியில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை என்று ஆல்ரவுண்டர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் அக்சர் படேல். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படாத அக்சர் படேல், மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார். அதிலும் பவர் பிளே ஓவர்களிலும் அக்சர் படேல் தைரியமாக பந்துவீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆஃப்கானிஸ்தான் டாப் ஆர்டரை வீழ்த்த இந்திய அணி பவுலர்கள் போராடிய போது, அடுத்தடுத்த ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் அக்சர் படேல். முன்பைவிடவும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் உள்ளிட்டவற்றில் அக்சர் படேல் அதிக முன்னேற்றங்களை எட்டியுள்ளது கண்கூடாக தெரிகிறது.
இந்த நிலையில் போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து அக்சர் படேல் பேசுகையில், ஆசிய கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியவில்லை. அதன்பின் என்சிஏவில் அதிக நேரம் செலவிட்டேன். அது எதிர்பார்க்காத காயம் என்றே சொல்ல வேண்டும். இதற்கு முன்னதாகவும் பல நேரங்களில் காயமடைந்ததால், எப்படி செயல்பட வேண்டும் என்பதை திட்டமிட தொடங்கினேன்.
என்சிஏவில் இருந்து எனது பவுலிங்கில் 5 முதல் 10 சதவிகிதம் வரை கூடுதலாக உழைப்பை கொடுத்தேன். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் எனது வேகத்தை மாற்றியதோடு, க்ரீஸை பயன்படுத்தி பந்துவீசினேன். லெஸ் ஸ்பின்னரை போல் என்னிடம் அதிக வித்தியாசமான பந்துகள் இல்லை. கூக்ளி பந்துகளை வீச முடியாது. அதனால் வேகத்தில் மாறுபாட்டை கொண்டு வந்தேன். அதேபோல் எனது பவுலிங் எகனாமியை பற்றி கவலை கொள்வதில்லை. எனது மனநிலையை முழுக்க முழுக்க அட்டாக் செய்ய வேண்டும் என்று மாற்றி கொண்டுள்ளேன்.
அதுதான் எனக்கு கூடுதல் மன உறுதியை அளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் எகனாமிக்கலாக வீசுவதை விடவும், விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியம் என்று நினைக்கிறேன். மொஹாலி பிட்சில் பவுலர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதனால் பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்காக காத்திருந்தேன். லைன் மற்றும் லெந்தில் தான் கவனம கொண்டிருந்தேன். அதேபோல் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் எந்த வித்தியாசமும் பெரியளவில் இல்லை. அனைத்து சுதந்திரமும் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. என் திட்டம் சரி வரவில்லை என்றால் மட்டுமே அவர்கள் ஆலோசனை கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.