IND vs AFG: இந்திய வரலாற்றிலேயே எந்த வீரரும் செய்யாத வரலாற்று சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா
மொஹாலி: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய மிக வயதான இந்திய வீரர் என்ற புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடியபோது ரோஹித் சர்மாவின் வயது 39 ஆண்டுகள் 44 நாட்கள் ஆகும். இதன் மூலம், 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த மொஹிந்தர் அமர்நாத்தின் நீண்ட கால சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். இதற்கு முன்னர், 1989 அக்டோபர் 30 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மொஹிந்தர் அமர்நாத் தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடியபோது அவரது வயது 39 ஆண்டுகள் 36 நாட்கள் ஆகும்.

ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட தொடைப் பகுதி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ரோஹித் சர்மா, இந்த ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாட மாட்டார் என்றே பலரும் கருதினர். எனினும், பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கடைசி நேரத்தில் தேர்ச்சி பெற்று அவர் அணியில் இணைந்தார். சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் களமிறங்கி, இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு
ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 11000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவ போட்டிகளையும் சேர்த்து 20000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சர்வதேச வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா 3 வது இடத்தில் உள்ளார். இந்த ஆப்கானிஸ்தான் தொடரில் ரோஹித் சர்மா சதம் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக வயதான இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடிப்பார். கடந்த 2012 ஆம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சச்சின் தனது கடைசி ஒருநாள் சதத்தை அடித்தபோது, அவருக்கு வயது 38 ஆண்டுகள் 327 நாட்கள் ஆகும்.
உலக அளவிலான சாதனை யாருக்கு?
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய மிக வயதான வீரர் என்ற ஒட்டுமொத்த சர்வதேச சாதனையானது நெதர்லாந்து நாட்டின் நோலன் கிளார்க் வசம் உள்ளது. இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தனது 47 ஆண்டுகள் 257 நாட்களில் விளையாடி இச்சாதனையை படைத்தார்.


Click it and Unblock the Notifications
