பார்படாஸ் : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அதன்பின் அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடுகிறேன் என்ற பெயரில் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். அதில் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நெட்ரவால்கரிடம் தேடி சென்று விக்கெட்டை விட்டுக் கொடுத்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தனது பேட்டிங் ஃபார்மை ரோகித் சர்மா நிச்சயம் மீட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஜனவரி மாதம் நடந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 196 ரன்களை விளாசி தரமான கம்பேக் ஒன்றை கொடுத்தார்.
அதேபோல் மீண்டும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு மேஜிக்கை ரோகித் சர்மா செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு மெகா சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 194 சிக்சர்களை விளாசி இருக்கிறார்.
இந்த போட்டியில் 6 சிக்சர்களை ரோகித் சர்மா அடித்தால், 200 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை ரோகித் சர்மா படைப்பார். இந்த பட்டியலில் 194 சிக்சர்களுடன் ரோகித் சர்மா முதலிடத்திலும், 173 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் கப்தில் 2வது இடத்திலும், 130 சிக்சர்களுடன் இங்கிலாந்து கேப்டன் பட்லர் 3வது இடத்திலும், 129 சிக்சர்களுடன் ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் 4வது இடத்திலும் உள்ளார்.
அதேபோல் 128 சிக்சர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரன் 5வது இடத்திலும் உள்ளனர். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற மெகா சாதனையை படைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.