மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் விளாசிய அபார சதம் அவரின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நெருங்கிய போது, சஞ்சு சாம்சனை பிசிசிஐ டி20 அணியில் சேர்த்து வாய்ப்பு கொடுத்து வந்தது. தற்போது டி20 உலகக்கோப்பை நெருங்கிய நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வு செய்தது.

இதனால் சஞ்சு சாம்சனை பிசிசிஐ சிறப்பாக கையாளவில்லை என்று ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அனைவரும் திணறிய போது, திலக் வர்மாவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் ஆடிய ருத்ரதாண்டவம் இந்திய தேர்வு குழுவினரை மீண்டும் அவரை நோக்கி வரவழைத்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது ஓய்வு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த இஷான் கிஷன், டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் என்பதால், இந்த டி20 தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு நிச்சயம் டி20 உலகக்கோப்பையிலும் வாய்ப்பு வழங்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் 3 போட்டிகள் இருப்பதால் நிச்சயம் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இடதுகை பேட்ஸ்மேனாக ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருப்பதால், மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் நிரந்தர இடத்திற்காக போராடி வரும் சூழலில், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.