இந்தூர் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டியில் சிவம் துபே பேட்டிங்கில் அபாரமாக விளையாடி இரண்டு அரைசதம் அடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பந்து வீச்சிலும் விக்கெட்டுகளை எடுத்து ஹர்திக் பாண்டியா இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தை நிரப்பி விட்டார்.
இதனால் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குள் வந்தாலும் இடம் கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. சாதாரண வீரராக திகழ்ந்த சிவம் துபே, சிஎஸ்கேவுக்கு வந்தவுடன் விஸ்வரூபம் எடுத்தார்.

சிஎஸ்கே வின் முக்கிய வீரராக திகழ்ந்த சிவம் துபே தற்போது இந்திய அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறார். தமது வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவம் துபே நான் இவ்வாறு சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணி மற்றும் தோனி தான். என்னிடம் எப்போதுமே இது போல் அதிரடியாக ஆடக்கூடிய திறமை இருக்கிறது.
ஆனால் என்னிடமிருந்து அதை வெளிக்கொண்டு வந்து என்னை சிறந்த வீரராக உருவாக்கியது சிஎஸ்கே வின் செயல் தான். கிரிக்கெட்டில் தேவைப்படக்கூடிய அனைத்தையும் எனக்கு சிஎஸ்கே தான் வழங்கியது. அவர்கள் தான் எனக்கு நம்பிக்கையை கொடுத்தார்கள். இதோ பார் சிவம் துபே, உன்னால் ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடிக்க முடியும். கவலைப்படாதே உன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள்.
தோனி மட்டுமல்லாமல் மைக்கேல் ஹசி, பிளமிங் போன்றோர் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். அது எப்போதுமே என் மனதில் இருக்கும். சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை போல் தான் தற்போது இந்திய அணிக்காகவும் விளையாடுகிறேன். என் மீது ரோகித் சர்மா நம்பிக்கை வைத்து எனக்கான பொறுப்பை வழங்கினார்.
சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது அதிரடியாக ஆட வேண்டும் என்பதுதான் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சிவம் துபே 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.