என்ன மனுசன் யா? மக்கள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த செயல்.. எதிரணி ரசிகர்கள் இதயத்தை வென்றார்
டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் 127 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்திய இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. போட்டிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவின் போது, இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் சத்ரானை வெற்றியாளர் மேடைக்கு அழைத்தது ரசிகர்களின் இதயத்தை வென்றது.
தனது அணியினருடன் மட்டும் வெற்றியைக் கொண்டாடாமல், ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் சத்ரானையும் அழைத்து ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையைப் பகிர்ந்து கொண்டார். மேலும், இந்திய அணியினருடன் சாம்பியன் புகைப்படத்திற்கு இணைந்து போஸ் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இரு அணிகளுக்கும் இடையிலான மரியாதையை வெளிப்படுத்திய இந்த நெகிழ்ச்சியான தருணம், இந்தத் தொடரின் பெயரான Friendship Cup என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைந்தது. சத்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தொடர் முழுவதும் கடுமையாகப் போராடிய நிலையில், ஐயரின் இந்த பெருந்தன்மையான செயல் ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த தொடர் இந்தியாவில் நடந்தது என்றாலும், இதனை நடத்தியது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த போட்டியில், இந்திய அணியின் இடதுகை ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 34 பந்துகளில் 108 ரன்கள் குவித்து அவர் சாதனை படைத்தார்.
இதில் 30 பந்துகளிலேயே சதம் கடந்த அவர், கடந்த 2017-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ரோஹித் சர்மா 35 பந்துகளில் அடித்த அதிவேக சத சாதனையை முறியடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் Full Member நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் அடித்த அதிவேக சதம் என்ற புதிய சாதனையையும் அபிஷேக் சர்மா தனது வசமாக்கியுள்ளார்.
அபிஷேக்கின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணி 20 ஓவர்களில் 221/7 ரன்கள் குவிக்க வலுவான அடித்தளமாக அமைந்தது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், 50 ரன்கள் எடுத்து அணிக்கு பக்கபலமாகத் திகழ்ந்தார்.
222 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் கடுமையான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணி 14.1 ஓவர்களில் வெறும் 94 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications


