மும்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடப் போகிறார். சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் கழித்து டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி திரும்பி இருக்கிறார்.
இதனால் டி20 உலக கோப்பையில் விராட் கோலியின் பங்கு மிகவும் முக்கியமானது என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். விராட் கோலி ஏன் டி20 கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது குறித்து ரெய்னா அளித்துள்ள பேட்டியை தற்போது காண்போம்.

விராட் கோலி எப்போதுமே அதிரடியாக ஆட கூடிய வீரர். அவர் களத்தில் நின்றால் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். ரசிகர்கள் அனைவரும் டி-20 கிரிக்கெட் மிகவும் சின்ன விளையாட்டு என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு 20 ஓவர் என்பது கொஞ்சம் பெரிய போட்டி தான். ஏனென்றால் நீங்கள் களத்தில் 20 ஓவர் நின்று விளையாட வேண்டும்.
நாம் இன்னும் மூன்று நான்கு மாதத்தில் டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விளையாடப் போகிறோம். அங்கு ஆடுகளங்கள் வீரர்களுக்கு கடும் சவால்களை கொடுக்கும் வகையில் இருக்கும். சில ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் தோய்வாகவும் இருக்கும். இது போன்ற ஆடுகளத்தில் விராட் கோலியின் அனுபவம் மிகவும் முக்கியமானது.
இந்தியா 19 போட்டிகளில் 17 போட்டிகளில் சேசிங்கில் விராட் கோலியின் தயவால் வெற்றி பெற்றிருக்கிறது. சேசிங் செய்யும் போது மனதில் எப்படி விளையாட வேண்டும் என்று கணக்கு போட்டு பேட்ஸ்மேன் செயல்படுவார்கள். அப்படித்தான் விராட் கோலி விளையாடுவார். இதனால் தான் அவரை சேஸ் மாஸ்டர் என்று அனைவரும் கூறுகிறார்கள்.
விராட் கோலி அதிரடியையும் காட்டுவார். அவர் முழு இருவது ஓவரையும் இன்று பேட்டிங் செய்தால் இந்தியா நிச்சயம் 225 ரன்கள் அடிக்கும். சிவம் துபே மூன்றாவது வேகப்பந்துவீச்சராக பயன்படுத்துவது சவாலான காரியம். அவர் நான்காவது வேகப்பந்துவீச்சாளருக்கு சென்ற இடத்திற்கு தான் சரியாக இருப்பார் என்று ரெய்னா கூறியுள்ளார்.