மொஹாலி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாட மாட்டார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதம் விளாசி மீண்டும் ஃபார்முக்கு வந்தார். அதன்பின் மீண்டும் பீஸ்ட் மோடில் சதங்களாக விளாசி அசத்தி வருகிறார். இந்த நிலையில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கவுள்ளது.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் விராட் கோலி டி20 கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து வந்தார். அதன்பின் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த நிலையில் 14 மாதங்களுக்கு பின் மீண்டும் டி20 கிரிக்கெட் விளையாட விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் விராட் கோலி இந்த டி20 தொடரில் விளையாடுவார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மொஹாலியில் நாளை நடக்கவுள்ள முதல் டி20 போட்டிக்கு முன்பாக இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் டிராவிட் பேசுகையில், சொந்த காரணங்களால் விராட் கோலி இந்திய அணியுடன் மொஹாலிக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.
தொடக்க போட்டிக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி போட்டியிலும் விராட் கோலி பங்கேற்கவில்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் விராட் கோலி விளையாட மாட்டார். இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்காளாக களமிறங்குவார்கள். இந்திய அணியின் தேவைக்கேற்ப வீரர்கள் விளையாட தயாராக இருக்கிறார்கள்.
கடந்த சில தொடர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக சிறந்த தொடக்கத்தை அளித்துள்ளார். அதேபோல் ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா களமிறங்குவதால், இந்திய அணிக்கு இடது - வலது காம்பினேஷனில் களமிறங்க முடியும் என்று தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன்பாக திடீரென விராட் கோலி குடும்பத்தினரை சந்திக்க சென்றார். தற்போது முதல் போட்டியில் இருந்து விலகி இருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.