மும்பை: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அவசர அவசரமாக மும்பை திரும்பியுள்ளது ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்று சமன் செய்து அசத்தியது. முதல் போட்டியில் சொதப்பினாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி கில்லியாக செயல்பட்டு அசத்தியது. குறிப்பாக ரோகித் சர்மாவின் கேப்டன்சி இரண்டாவது போட்டியில் சிறப்பாக இருந்தது. இந்திய அனியின் வெற்றிக்கு அதுவும் முக்கிய காரணம்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை முடித்த கையோடு கேப்டன் ரோகித் சர்மா உடனடியாக மும்பைக்கு திரும்பியுள்ளார். குடும்பத்துடன் தென்னாப்பிரிக்காவில் இருந்த ரோகித் சர்மா அவசர அவசரமாக திரும்பியதற்கான காரணம் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் ஜனவரி 11ஆம் தேதி தொடங்கவுள்ளது.
சில நாட்களுக்கு முன் இந்திய அணிக்கான தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டி20 எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையின் போது, சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஆர்வம் காட்டியதாக தகவல் வெளியாகியது.
இதனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியது. அதில் பங்கேற்பதற்காகவே ரோகித் சர்மா விரைந்து மும்பைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 கிரிக்கெட் பக்கமே வரவில்லை.
இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் கொண்டு டி20 அணி உருவாக்கப்பட்டது. ஒருவேளை ரோகித் சர்மா டி20 அணிக்கு திரும்பும் பட்சத்தில் கேப்டன்சி ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பறிக்கப்படும் சூழல் உருவாகும். இதனால் இந்திய அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.