இந்தூர்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சிவம் துபே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், தற்போது அவரின் காதல் கதை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியதோட, பேட்டிங்கில் 40 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து அசத்தினார் சிவம் துபே. அதுமட்டுமல்லாமல் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக ஆடி பிரபலமடைந்த சிவம் துபே, தற்போது இந்திய அணிக்காக வென்று கொடுத்ததன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கான சரியான மாற்று வீரராக சிவம் துபே இருப்பார் என்று ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சிவம் துபேவின் காதல் கதை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
30 வயதாகும் சிவம் துபே, 2021ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அஞ்சம் கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இஸ்லாமியரான அஞ்சம் கான், உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். ஃபைன்ஸ் ஆர்ட்ஸ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள அவர், நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் செயலாற்றி வருகிறார். சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வீடியோ பாடல்களில் தோன்றி பிரபலமடைந்தவர்.
இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், சிவம் துபே சமூக வலைதளங்களில் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார். அதன்பின் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இந்து மற்றும் இஸ்லாமிய முறைகளில் திருமணம் செய்து கொண்டு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிவித்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் எழுந்த நிலையில், எந்த பதிலும் அளிக்காமல் சொந்த வாழ்க்கையிலும், கிரிக்கெட் களத்திலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
அதன்பின் சிஎஸ்கே அணியுடன் இணைந்த அவருக்கு, கிரிக்கெட்டிலும் உச்சமாக அமைந்தது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சிவம் துபேவுக்கு, ஆண் குழந்தை உள்ளது. வெவ்வேறு மதங்களை பின்பற்றி வரும் தம்பதியான சிவம் துபே - அஞ்சம் கான் இருவரும் சொந்த வாழ்க்கையிலும் வெற்றிகரமாக இருந்து வருவது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.