சிட்னி: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக 2வது இன்னிங்ஸில் பவுலிங் செய்ய களமிறங்கவில்லை என்று தெரிந்த போது, ஆஸ்திரேலியா அணியின் 15 வீரர்கள் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை என்று ட்ராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஓய்வறைக்கு சென்றார்.

இதன்பின் முதுகு தடை பிடிப்பு காரணமாக பும்ரா 2வது இன்னிங்ஸில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது இந்திய அணி ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் பவுலிங் செய்ய பும்ரா வர மாட்டார் என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி எளிதாக இலக்கை எட்டி சாதனை வெற்றியை பெற்றது.
இந்த வெற்றிக்கு பின் ஆஸ்திரேலியா அணியின் ட்ராவிஸ் ஹெட் பேசுகையில், எப்போதும் ஆட்டத்தின் முடிவை பற்றி பெரிதாக கவலை கொண்டதில்லை. இரு சிறந்த அணிகள் மோதிய போதும், எனது அணிக்காக பங்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த ஆட்டமாக இருந்தாலும் எனது அணுகுமுறை ஒரே மாதிரி தான் இருக்கும். இன்று களமிறங்கிய போது, கவாஜாவுடன் பார்ட்னர்ஷிப் கட்டமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
கடந்த முறை இந்திய அணி இங்கு வந்த போது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இம்முறையும் பெர்த் டெஸ்டில் மிரள வைத்துவிட்டனர். இந்த தொடரின் 5 போட்டிகளுமே சுவாரஸ்யமாக அமைந்தது. தொடர்ச்சியாக விளையாடியதால் ஓய்வு எடுக்க விரும்புகிறேன். இம்முறை அதிகளவில் எங்கள் மீது மீடியா வெளிச்சமும் இருந்தது.
இந்திய அணியின் கேப்டன் பும்ரா பவுலிங் செய்ய களமிறங்காததை அறிந்த போது, ஆஸ்திரேலியா அணியின் 15 வீரர்களும் நிம்மதியடைந்தோம். அவர் மிகச்சிறந்த பவுலர். இந்த டெஸ்ட் தொடர் அவருக்கு மிகச்சிறந்த ஒன்றாகவும் அமைந்தது. நிதிஷ் குமார் ரெட்டிக்கும் சிறந்த பயணமாக இருந்திருக்கும். அவர் முன்பே அறிவேன். இந்திய அணியின் இன்னும் சில வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
நாங்களும் நன்றாக ஆடி வென்றுள்ளோம். அடுத்த 10 நாட்களுக்கு என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை. கொஞ்சம் ஓய்வெடுத்த பின், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகுவேன் என்று தெரிவித்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரிட் பும்ரா 8 இன்னிங்ஸில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.