பெர்த்: இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தடுமாறி 131 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. அறிமுக வீரர் நிதிஷ் குமார் ரெட்டியின் கடைசி நேர அதிரடியால், இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் குவித்தது. டக்வொர்த்-லூயிஸ் (DLS) முறைப்படி, ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெர்த் ஆப்டஸ் மைதானத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. எட்டு மாதங்களுக்குப் பிறகு களமிறங்கிய ரோஹித் சர்மா (8), விராட் கோலி (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். கேப்டன் ஷுப்மன் கில் (10), ஸ்ரேயாஸ் ஐயர் (11) ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேற, இந்திய அணி 13.2 ஓவர்களில் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றார். 31 பந்துகளைச் சந்தித்த அவர், 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ராகுல் ஆட்டமிழந்த பிறகு, இந்திய அணி 150 ரன்களை எட்டுவதே கடினம் என்று கருதப்பட்டது. ஆனால், தனது அறிமுகப் போட்டியிலேயே களமிறங்கிய இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, கடைசி ஓவரில் ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
25-வது ஓவரில், கே.எல். ராகுல் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. ராகுல் ஆட்டமிழந்தது, இந்தியாவிற்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. கடைசி ஓவரில், இந்திய அணி 124/9 என்ற நிலையில் இருந்தது. அப்போதுதான், நிதிஷ் ரெட்டி 2 சிக்ஸர்களை அடித்து அசத்தினார். அதே சமயம் அந்த ஓவரில் தனக்கு ஸ்ட்ரைக் கிடைக்க வேண்டும் என்பதால் அர்ஷ்தீப் சிங்கை ரன் அவுட் செய்து இருந்தார் நிதிஷ்.
வெறும் 11 பந்துகளைச் சந்தித்த நிதிஷ் ரெட்டி, 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது இந்த அதிரடி ஆட்டம், இந்திய அணி ஒரு கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியதோடு, பந்துவீச்சாளர்களுக்குப் போராடுவதற்கான ஒரு வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஓவன் மற்றும் மேத்யூ குனேமன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மழை காரணமாக 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், 131 ரன்கள் என்பது ஆஸ்திரேலியாவுக்கு எளிதான இலக்காகவே பார்க்கப்படுகிறது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டால், இந்தப் போட்டியில் ஒரு த்ரில் வெற்றிக்கு வாய்ப்புள்ளது.