பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, மழையின் காரணமாக நான்கு முறை நிறுத்தப்பட்டது. முதல் முறை நிறுத்தப்பட்ட பின்னர் போட்டி சிறிது நேரத்தில் துவங்கிய போது 49 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. அதன் பின்னர் சுமார் 2 மணி நேரம் போட்டி தடைபட்டது. அதன் பின் 35 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது.
அதன் பின்னர் 12 பந்துகள் வீசப்பட்ட பின் மழையால் மீண்டும் நின்றது. அதன் பின் போட்டி மீண்டும் தொடங்கியபோது 32 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் பின் 14 பந்துகளே வீசப்பட்ட நிலையில் போட்டி மீண்டும் மழையால் நின்று பின்னர் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணி அதற்குள் 4 விக்கெட்களை இழந்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு குறைவான வெற்றி இலக்கே நிர்ணயம் செய்யப்படும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர்.
பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 25 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்தது.

எட்டு மாத கால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு களமிறங்கிய ரோஹித் சர்மா, 14 பந்துகளைச் சந்தித்து 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, 8 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆனார். இளம் கேப்டன் சுப்மன் கில், 18 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
ரோஹித், கோலி, கில் விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 25 ரன்களுடன் தள்ளாடியது. அப்போது, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்திய இன்னிங்ஸின் 8.5 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், கனமழை பெய்யத் தொடங்கியது. இதை அடுத்து, போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த போட்டியில் இந்திய அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்ததால், மழையால் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம் இந்திய அணிக்கு நிச்சயம் சாதகமாகவே அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிறிது நேரத்தில் மழை நின்றதால் போட்டி 10 மணிக்கு துவங்கியது. அப்போது 49 ஓவர் போட்டியாக மாற்றி அறிவிக்கப்பட்டது.
ஆனால், 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போட்டி மீண்டும் மழையால் நிறுத்தப்பட்டது. இதனால் மேலும் ஓவர்கள் குறைந்தது. 12.20 மணிக்கு போட்டி மீண்டும் துவங்கியது. அப்போது 35 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இரண்டு முறை மழையால் ஆட்டம் தடைபட்டது. அதனால் 26 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. 4 விக்கெட்களை இழந்த நிலையில் இந்திய அணிக்கு டக்வொர்த் லீவிஸ் முறையிலான ஓவர் குறைப்பு பாதகமாக முடியவே அதிக வாய்ப்பு உள்ளது.