பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ள முதல் ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிடுமா? பெர்த் வானிலை அறிக்கை என்ன சொல்கிறது? இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் ஜாம்பவான்களான விராட் கோலியும், ரோஹித் சர்மாவும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மீண்டும் இந்திய ஜெர்சியில் களமிறங்குகின்றனர். சுப்மன் கில்லின் தலைமையில் இந்திய அணி ஒரு முதன்முறையாக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்த முக்கியத்துவங்கள் இருக்கும் பெர்த் ஒருநாள் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
'அக்யூவெதர்' (Accuweather) வானிலை அறிக்கையின்படி, பெர்த்தில் இன்று காலை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பும், போட்டியின் போதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்பு, மழை பெய்வதற்கு 70 சதவீதம் வாய்ப்புள்ளது. போட்டி நடக்கும்போது, மழையின் வாய்ப்பு 35 சதவீதமாகக் குறையும்.
இந்தக் கணிப்பின்படி, டாஸ் தாமதமாகப் போடப்படலாம் அல்லது போட்டியின் தொடக்கத்தில் சில குறுக்கீடுகள் ஏற்படலாம். இருப்பினும், போட்டி முழுவதும் மழையால் பாதிக்கப்படும் அபாயம் குறைவாகவே உள்ளது.

பெர்த் ஆப்டஸ் மைதானம், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, பேட்ஸ்மேன்களுக்குச் சவாலானதாகவும், பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமானதாகவுமே இருந்து வந்துள்ளது. இந்த மைதானத்தில் நடந்த கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி 152 மற்றும் 140 ரன்களுக்குச் சுருண்டுள்ளது. மேகமூட்டமான வானிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை, வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தப் போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன், முதலில் பந்துவீசவே விரும்புவார்.
இந்தப் போட்டி, சுப்மன் கில்லின் ஒருநாள் கேப்டன்சி அறிமுகப் போட்டியாக இருந்தாலும், ஒட்டுமொத்த உலகின் கவனமும், 'ரோ-கோ' (ரோஹித்-கோலி) ஜோடியின் மீதே உள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் வடிவத்தில் மட்டுமே நீடிக்கும் அவர்களின் எதிர்காலம், இந்தத் தொடரின் செயல்பாட்டை பொறுத்தே அமையும் என்று கருதப்படுகிறது.
அவர்களின் அனுபவம் குறித்துப் பேசிய கேப்டன் சுப்மன் கில், "உலகம் முழுவதும் அவர்கள் பெற்ற வெற்றிகள், குவித்த ரன்கள், வென்ற கோப்பைகள் என அவர்களின் அனுபவம் அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், "ஞாயிற்றுக்கிழமை நாங்கள் சிறப்பாகத் தொடங்குவது மிகவும் முக்கியம். கடந்த தொடரைப் போல, கடைசிப் போட்டியில் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஒரு தரமான அணிக்கு எதிராக இது கடினமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.