அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், களத்தில் இருந்த சீனியர் வீரர் ரோஹித் சர்மாவுக்கும், ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு ரன் ஓடுவது தொடர்பாக ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடு, ரோஹித் சர்மா தனது கோபத்தை வெளிப்படையாகக் காட்டும் அளவிற்குச் சென்றது.
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஆட்டத்தின் தொடக்கமே இந்தியாவிற்குப் பேரிடியாக அமைந்தது. ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட், 7வது ஓவரில் கேப்டன் சுப்மன் கில் (9), விராட் கோலி (0) ஆகிய இருவரையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து 17 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தடுமாறியபோது, ரோஹித் சர்மாவும், ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், போட்டியின் 14வது ஓவரை ஜோஷ் ஹேசில்வுட் வீசினார்.
அந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட ரோஹித், அதை ஃபிலிக் செய்ய முயன்றார். பந்து பேட்டில் படாமல், அவரது பேடில் பட்டு அருகிலேயே விழுந்தது. அருகே ஃபீல்டர்கள் யாரும் இல்லாததால், ஒரு வேகமான சிங்கிள் எடுக்கலாம் என ரோஹித் நினைத்தார். அவர் ரன் ஓடுவதற்காக ஓடி வர முயற்சி செய்து, மறுமுனையில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயரை அழைத்தார்.
ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் அந்த ரன்னை ஓட திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்த ரோஹித் சர்மா, மைதானத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். கைகளை வேகமாக வீசி, ஸ்ரேயாஸ் ஐயரைப் பார்த்து கோபமாக கத்தினார். அவரது முகத்தில் தீவிர கோபம் வெளிப்பட்டது. இந்தக் காட்சி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
களத்தில் இருவருக்கும் இடையே அனல் பறந்தாலும், அவர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடர்ந்து பேட்டிங்கில் கவனம் செலுத்தினர். இந்த வாக்குவாதத்திற்குப் பிறகு, இருவரும் இணைந்து ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரோஹித் சர்மா 73 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 61 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப்பால் மட்டுமே இந்திய அணி 200 ரன்களை தாண்டியது.