மும்பை: இந்திய அணியில் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட போது இந்திய அணியின் சீனியர் வீரர்களாக இருந்த யுவராஜ் சிங், முனாஃப் படேல், ஹர்பஜன் சிங் மற்றும் இர்ஃபான் பதான் ஆகிய 4 பேரும் சேர்ந்து பிராங்க் செய்த சம்பவம் குறித்து விராட் கோலி பேசியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய விராட் கோலி மொத்தமாக 93 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 22வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் 36வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள விராட் கோலி, மீண்டும் மாஸ் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிறந்தநாளினை மகள் வாமிகா, மகன் அகாய் மற்றும் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோருடன் மட்டுமே விராட் கோலி கொண்டாடியுள்ளார். இந்த நிலையில் மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர் கலந்து கொண்டனர். அப்போது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கம் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் வரை ஏராளமான விஷயங்கள் வரை பேசினார்.
அதில், இந்த பிறந்தநாள் மிகவும் சாதாரணமாக குழந்தைகளுடன் கொண்டாடினேன். இத்தனை ஆண்டுகளில் மிகவும் அமைதியாக கொண்டாடிய பிறந்தநாள் இதுவாக மட்டுமே இருக்கும். அதேபோல் அதிகமாக சிந்திக்க தொடங்கியுள்ளேனா என்பது தெரியாது. ஆனால் வயதாகி கொண்டே போகிறது என்பதை நன்றாக உணர்ந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்திய அணி இடம்பிடித்த போது நடந்த சம்பவம் குறித்து பேசுகையில், 2008ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் முதல்முறையாக அறிமுகமானேன். அப்போது தான் சச்சின் டெண்டுல்கரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன் சில நிகழ்ச்சிகளில் பார்த்திருந்தாலும், ஓய்வறையில் அதுதான் முறையாக சந்தித்தது. அப்போது இந்திய அணியில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், முனாஃப் படேல், இர்ஃபான் பதான் இருந்தனர்.
அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து எந்த வீரர் இந்திய அணிக்கு வந்தாலும், சச்சின் டெண்டுல்கரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது தான் வழக்கம்.. நீயும் உடனடியாக சென்று சச்சினிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள் என்று கூறினார்கள். அதனை நான் மிகவும் முக்கியமான விஷயமாக எடுத்து கொண்டேன். நேராக சச்சினிடம் சென்று ஆசிர்வாதம் பெற கால்களில் விழுந்தேன்.
இதனால் சச்சின் டெண்டுல்கர் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்து விலகி நின்றார். பின்னர், என்ன செய்கிறாய் என்று அவர் என்னிடம் கேட்க, உங்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தேன். அதன்பின் தான் அந்த 4 பேரும் சேர்ந்து என்னை பிராங்க் செய்தது எனக்கு புரிய வந்ததாக தெரிவித்துள்ளார். இதேபோன்ற சம்பவம் தோனிக்கும் நடந்தது குறிப்பிடத்தக்கது.