கோல்ட் கோஸ்ட்: உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் மாபெரும் டி20 உலக சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பு உள்ளது . இந்தப் போட்டியில் அவர் 39 ரன்களை 67 பந்துகளுக்குள் எடுத்தால், டி20 கிரிக்கெட் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைப்பார்.
பஞ்சாபைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, கடந்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை, இந்திய அணிக்காக 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, 500 பந்துகளைச் சந்தித்து 961 ரன்களைக் குவித்துள்ளார்.

தற்போது, டி20 போட்டிகளில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனை ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் வசம் உள்ளது. சமீபத்தில் ஹோபார்ட்டில் நடந்த மூன்றாவது டி20 போட்டியின் போதுதான் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
இந்தச் சாதனையை முறியடிக்க, அபிஷேக் சர்மாவுக்கு இன்னும் 39 ரன்கள் மட்டுமே தேவை. அதை அவர் 67 பந்துகளுக்குள் எடுத்துவிட்டால், டிம் டேவிட்டை முந்தி புதிய உலக சாதனை படைப்பார்.
அதுமட்டுமல்லாமல், போட்டிகளின் அடிப்படையில் அதிவேகமாக 1000 டி20 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைக்க அபிஷேக் சர்மாவுக்கு வாய்ப்புள்ளது. தற்போது இந்தச் சாதனை விராட் கோலி வசம் உள்ளது. கோலி தனது 29-வது போட்டியின் 27-வது இன்னிங்ஸில் 1000 ரன்களைக் கடந்தார்.
அபிஷேக் சர்மா இதுவரை 27 போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். எனவே, இந்தப் போட்டியில் 39 ரன்களை எடுத்தால், கோலியை விடக் குறைவான போட்டிகள் மற்றும் இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.
அபிஷேக் சர்மாவைத் தவிர, இந்திய அணியின் மற்ற வீரர்களான திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டக் காத்திருக்கின்றனர். திலக் வர்மா இதுவரை 32 போட்டிகளில் 991 ரன்களும், சஞ்சு சாம்சன் 51 போட்டிகளில் 995 ரன்களும் எடுத்துள்ளனர்.