மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய நெருக்கடியில் தள்ளப்பட்டு இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைந்தது.
மழை பெருமளவு குறுக்கீடு செய்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்ததன் மூலம் காப்பாற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அப்படி ஒரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்து இருக்கிறது. குறிப்பாக ஸ்மித் 140 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலியா 350 முதல் 370 ரன்கள் சுருட்டி இருந்தால் நிச்சயம் இந்திய அணி வலுவான நிலையில் இருந்திருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவை பெரிய இலக்கை இந்திய அணி அடித்து விட்டது.
இந்த தருணத்தில் இந்திய அணியில் முதலில் குறைந்தபட்சம் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அருகே வரை வர வேண்டும். ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா மூன்று ரன்களிலும், ராகுல் 24 ரன்களிலும் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 82 ரன்களில் ரன் அவட் ஆனார். விராட் கோலி 36 ரன்களில் வெளியேற, ஆகாஷ் தீப் டக் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 5விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் பாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்றால் 275 என்ற ஸ்கோரை எடுக்க வேண்டும். இதனால் இந்திய அணி இன்னும் 111 ரன்கள் எடுக்க வேண்டும். இதனால் களத்தில் இருக்கும் ரிஷப் பண்ட், ஜடேஜா பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தால் மட்டுமே இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க முடியும்.
ஆஸ்திரேலியாவின் இலக்குக்கு அருகே வரவேண்டும் என்றால் பண்ட் சதம் அடிக்க வேண்டும். இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 400 ரன்கள் மேலாவது அடிக்க வேண்டும். கடந்த போட்டியில் மழை காப்பாற்றியது போல் இம்முறை மழை குறுக்கீடு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.