சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா பிளேயிங் லெவனில் விளையாடுவாரா? என கவுதம் கம்பீரிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நேரடியாக பதில் அளிக்காமல் போட்டி துவங்கும் பிட்ச்சை பார்த்துவிட்டு, டாஸ் போடும் முன் நாங்கள் பிளேயிங் லெவனை தேர்வு செய்வோம் என அறிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் ரோஹித் சர்மாவுக்கு பிளேயிங் லெவனில் கூட இடமில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பதாக சந்தேகம் எழுந்து உள்ளது. ரோஹித் சர்மா சிட்னியில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விளையாடுவாரா? அல்லது அணியிலிருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் பும்ரா அணியின் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என செய்திகள் வெளியானது. அதை கவுதம் கம்பீர் உறுதி செய்து இருக்கிறார். ஆகாஷ் தீப் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இந்திய அணி இரண்டு தோல்விகள், ஒரு வெற்றி மற்றும் ஒரு டிரா செய்துள்ளது. இந்த நிலையில் ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை 2 - 2 என சமன் செய்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் அவரது பேட்டிங் குறித்து கடும் விமர்சனங்கள் இருக்கும் நிலையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பொதுவாக இது போன்ற டெஸ்ட் தொடர்களில் கேப்டனே பெரும்பாலும் போட்டிக்கு முந்தைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார்.
ஆனால், இந்த முறை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சந்தித்து இருக்கிறார். இதன் மூலம், இந்திய அணியின் கேப்டன்சியில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் இது தொடர்பான கேள்வி கவுதம் கம்பீரிடம் கேட்கப்பட்டது. ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் அளிக்கப்படுமா? என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கம்பீர், டாஸ் போடும் முன் பிட்ச்சை பார்த்துவிட்டு பிளேயிங் லெவனை அறிவிப்போம் என கூறி இருக்கிறார். இதன் மூலம் அவர் ரோஹித் சர்மாவை கேப்டன் இல்லை எனவும், அணியில் இருப்பாரா? இல்லையா? என்பதே சந்தேகம் என்பதையும் சூசகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.