சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை நேரில் மட்டும் 8,37,879 பேர் கண்டு ரசித்துள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றிலேயே ஆஷஸ் தொடர் அல்லாமல் மற்ற டெஸ்ட் தொடர்களுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருந்ததில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சமபலம் வாய்ந்த அணிகள் மோதிய ஆட்டம் என்றால், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய தலைவர் நிக் ஹாக்லி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் வாழ்த்துகள். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்ட தொடராக அமைந்துள்ளது. அதேபோல் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 10 ஆண்டுகளுக்கு பின் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள்.
இந்த டெஸ்ட் தொடர் நிச்சம மிகச்சிறந்த ஒன்றாக அமையும் என்பது அறிந்த ஒன்று தான். ஆனால் மைதானத்திற்கு வந்த ரசிகர்களின் எண்ணிக்கை, நேரலையில் பார்த்தவர்களின் எண்ணிக்கை, டிஜிட்டல் தளங்களில் பார்த்த ரசிகர்கள் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தொடர்புடைய அத்தனை சேனல்களிலும் கற்பனை செய்ததற்கும் அதிகமாக உள்ளது.
தொலைக்காட்சி, மொபைல், மைதானங்கள் என்று எந்த வகையில் பார்த்திருந்தாலும், இது ரசிகர்களுக்கு ஒரு வாழ்நாள் அனுபவம். இதன் அங்கமாக இருந்த அனைவருக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா சார்பாக மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார். அதேபோல் மைதானங்களுக்கு நேரில் வந்து பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெர்த் டெஸ்ட் போட்டியை மட்டும் 96,463 ரசிகர்கள் நேரில் பார்த்திருக்கின்றனர். தொடர்ந்து அடிலெய்டு மைதானத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியை மட்டும் 1,35,012 ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர். பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை 91,195 பேர் நேரில் கண்டு ரசித்துள்ளனர். இந்த ஆட்டம் மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது.
தொடர்ந்து மெல்போர்ன் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை 3,73,691 ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். 1937ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை டான் பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வீழ்த்திய போது கூட 3,50,534 பேர் நேரில் பார்த்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் முறியடித்துள்ளது.
சிட்னி டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை முதல் நாளில் மட்டும் 47,998 பேர் பார்த்திருக்கின்றனர். மொத்தமாக 8,37,879 பேர் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மைதானங்களில் கண்டு ரசித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆஷஸ் தொடர் அல்லாமல் இதுவரை நடந்துள்ள டெஸ்ட் தொடரில், இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு தான் அதிகளவிலான பார்வையாளர்கள் வந்துள்ளனர்.