சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தவறினால், அவரிடம் இருந்து கேப்டன்சியை பும்ராவுக்கு வழங்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறிய கருத்துக்கு, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் நவ.22ல் தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணியால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு எந்த அணியின் உதவியும் இல்லாமல் தகுதிபெற முடியும்.

இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனிடையே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் சில போட்டிகளில் இருந்து விலக உள்ளது தெரிய வந்தது. ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் மனைவிக்கு ஆதரவாக இருக்கவும், 2வது குழந்தையை உலகிற்கு வரவேற்கவும் ரோஹித் முடிவு எடுத்துள்ளார்.
இந்த நிலையில் ரோஹித் சர்மா விலகல் குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு போட்டியில் இல்லாமல் 2 போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. என்னை பொறுத்தவரை 5ல் 2 போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்றால், அவரை எதற்காக கேப்டனாக அறிவிக்க வேண்டும்.
சொந்த காரணங்களுக்காக ரோஹித் சர்மா ஓய்வு எடுக்க விரும்பினால், துணைக் கேப்டனையே இந்திய அணியின் கேப்டனாக நியமனம் செய்து தேர்வு குழு அறிவித்திருக்க வேண்டும். மீண்டும் 2ஆம் பாதியில் வந்து இந்திய அணியுடன் ரோஹித் சர்மா இணைந்தாலும் சாதாரண வீரராகவே விளையாட அனுமதிக்கப்பட வேண்டும்.இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இருந்தால், சூழல் வேறு மாதிரி இருந்திருக்கும்.
ஆனால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அனைத்து நேரங்களிலும் முன் நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏனென்றால் ஒரு கிரிக்கெட் அணியை கேப்டனால் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும். ஒரு கேப்டனால் தொடக்கம் முதல் விளையாட முடியாது என்று, வேறு ஒருவரை கேப்டனாக அறிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் சுனில் கவாஸ்கரின் கருத்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசுகையில், சுனில் கவாஸ்கரின் கருத்துடன் மொத்தமாக முரண்படுகிறேன். ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். குழந்தை பிறப்புக்காக வீட்டில் இருக்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. வாழ்வின் மிக முக்கியமான தருணங்களில் இதுவும் ஒன்று. அதனால் எப்படியான போட்டியாக இருந்தாலும் ரோஹித் சர்மா ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.