சிட்னி: ரோஹித் சர்மாவுடன் எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தால் நடந்த விஷயங்களை பார்த்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட், வியப்பின் உச்சிக்கே சென்று இருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றபோது, வர்ணனையில் ஈடுபட்டிருந்த ஆடம் கில்கிறிஸ்ட், சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் கிரிக்கெட்டின் வணிக அம்சங்கள் எப்படி மாறியுள்ளன என்பது குறித்துப் பேசினார்.
அப்போது, ரோஹித் சர்மாவுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்படுத்திய பிரம்மாண்டமான தாக்கத்தைப் புள்ளிவிவரங்களுடன் பகிர்ந்து தனது வியப்பை வெளிப்படுத்தினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடப்பதற்கு முன்பு, கிரிக்கெட்டின் இருபெரும் ஜாம்பவான்களான ஆடம் கில்கிறிஸ்டும், ரோஹித் சர்மாவும் சந்தித்துக் கொண்டனர். 17 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தங்களது நட்பை நினைவுகூர்ந்த இந்தச் சந்திப்பு ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
இந்தச் சந்திப்பு குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹித்துடன் எடுத்த செல்ஃபியைப் பகிர்ந்த கில்கிறிஸ்ட், மனதைத் தொடும் ஒரு பதிவையும் வெளியிட்டிருந்தார். அதில், "17 ஆண்டுகளுக்கு முன்பு, 2008-ல் இதே அடிலெய்டு மைதானத்தில்தான் நாங்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்தோம் என்பதை இந்த இளைஞர் இன்று எனக்கு நினைவூட்டினார். முதல் ஐபிஎல் ஏலத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக நாங்கள் இருவரும் வாங்கப்பட்டிருந்த நேரம் அது. அன்று முதல் எங்கள் நட்பு பிறந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.
"சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெளியேறும் ஒரு வயதான காளை (Old Bull), இந்தியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவாகிக் கொண்டிருந்த ஒரு இளம் காளையுடன் (Young Bull) இணைந்தது. ரோஹித் சர்மா, உங்களுக்கு எதிராகவும், உங்களுடன் விளையாடியதும், ஒரு வர்ணனையாளராகவும், ரசிகராகவும் உங்களைக் கவனிப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களை ஒரு நண்பராக அறிந்துகொண்டது இன்னும் சிறந்தது" என்று கில்கிறிஸ்ட் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
கில்கிறிஸ்டின் இந்த பதிவு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக பரவியது. டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ரோஹித் சர்மா இணைந்து விளையாடி 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்று இருந்தனர். வெவ்வேறு காலகட்டங்களையும், நாடுகளையும் சேர்ந்த இரு வீரர்களுக்கு இடையேயான மரியாதை மற்றும் நட்பைக் கண்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்தப் புகைப்படம் 10 லட்சத்திற்கும் (1 மில்லியன்) அதிகமான லைக்குகளை அள்ளியது.
மூன்றாவது ஒருநாள் போட்டி வர்ணனையின்போது இது பற்றி பேசிய கில்கிறிஸ்ட், "இந்த எண்கள் இந்திய ரசிகர்களுக்குப் பெரிதாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், ரோஹித் சர்மாவுடனான ஒரு சாதாரண ஸ்டோரி எனக்கு 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுத் தந்தது. அந்தப் புகைப்படம் மட்டும் 24,000 ஃபாலோயர்களைப் பெற்றுத் தந்தது" என்று ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார்.