சென்னை: 3,118 நாட்களுக்கு பின் ஐசிசி போட்டியில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலிய அணி வீரர் கேமரூன் க்ரீன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் களமிறங்கியது.

சேப்பாக்கம் மைதானத்தில் Black Soil பிட்ச் அமைக்கப்பட்டுள்ளதால், நிச்சயம் சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் இருக்கும் என்பதால், இந்திய அணி 3 பேரையும் பிளேயிங் லெவனில் சேர்த்தது. அதிலும் 2011ஆம் ஆண்டு முதல் ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக சென்னை மைதானத்தில் விளையாடி இருக்கிறார். அதேபோல் அஸ்வினுக்கு சொந்த மண் என்பதால், இருவரும் விக்கெட் வேட்டையாடுவார்கள் என்று பார்க்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் 3,118 நாட்களுக்கு பின் இந்திய அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் ஐசிசி போட்டிகளில் களமிறங்கினார். இதனால் மாஸ் சம்பவத்திற்கு சென்னை ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் கூடியிருந்தனர். அஸ்வின் முதல் ஸ்பெல்லை வீச அழைக்கப்பட்ட போதே சேப்பாக்கம் மைதானத்தில் உற்சாக குரல் எழுந்தது. ஒவ்வொரு பந்துக்கும் அந்த உற்சாகம் கூடிக் கொண்டே இருந்தது. ஆனால் அந்த ஸ்பெல்லில் கட்டுக்கோப்பாக அஸ்வின் வீசி இருந்தார்.
அதன்பின் இரண்டாவது ஸ்பெல்லை அஸ்வின் வீச அழைக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணி 140 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி கொண்டிந்தது. களத்தில் முழுமையான பேட்ஸ்மேனாக கேமரூன் க்ரீன் மட்டுமே இருக்க, அவரையும் வீழ்த்தி அசத்தினார் அஸ்வின். இதையடுத்து சேப்பாக்கம் மைதானமே அஸ்வினுக்காக உற்சாக குரல் எழுப்பியது.
இதுவரை 9 ஓவர்களை வீசிய அஸ்வின் வெறும் 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு மெய்டன் உட்பட ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் அஸ்வின் தன்னை தேர்வு செய்த இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை சரியென நிரூபித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இனி எந்தெந்த மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கிறதோ, அந்த மைதானத்தில் அஸ்வின் களமிறங்கப் போவது நிச்சயம் என்று பார்க்கப்படுகிறது.